தனது புதிய படமான ஊ ல ல லா படத்தில் நடித்திருக்கும் திவ்யா பண்டாரி, த்ரிஷா, ஸ்ரேயா, இலியானா ஆகியோரைப் போல பிரபலம் ஆவார் என்று நடிகரும், இயக்குனருமான ஜோதி
கிருஷ்ணா கூறியுள்ளார். பட அதிபர் ஏ.எம்.ரத்னத்தின் மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கி, ஹிரோவாக நடிக்கும் படம் ஊ ல ல லா. இந்த படத்தில் ஜோதி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த திவ்யா பண்டாரி நடித்திருக்கிறார்.
அப்பாவாக தலைவாசல் விஜய்யும், எத்தனை துன்பம் வந்தாலும், சிரித்துக் கொண்டே அரவணைக்கும் அம்மாவாக ராணியும் நடித்துள்னர். இவர்களுடன் கஞ்சா கருப்பு, பட்டிமன்ற ராஜா, பக்கோடா பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு வசனம் எழுதியிருக்கும் சேகர் பிரசாத், ஜோதி கிருஷ்ணாவின் நண்பராக நடித்துள்ளார். எஸ்.ராம்பாபு, கலைச்செல்வன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.
இந்த படம் குறித்து டைரக்டரும், ஹீரோவுமான ஜோதி கிருஷ்ணா அளித்துள்ள பேட்டியில், யதார்த்த வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லும் படம் இது. ஒரு `கேர்ள் ப்ரெண்ட் கூட கிடைக்காத மக்கு மாணவனாக நான் நடித்திருக்கிறேன். எனக்கும் ஒரு காதலி கிடைக்கிறாள். அவளையாவது தக்க வைத்துக் கொண்டேனா, இல்லையா? என்பதுதான் கதை. இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் திவ்யா பண்டாரி, என் முந்தைய அறிமுகங்களான திரிஷா, ஸ்ரேயா, இலியானா ஆகியோரைப்போல் பிரபலம் ஆவார், என்று கூறியுள்ளார்.


