இலங்கையில் தனித் தமிழீழ நாடு உருவாக்குவது தொடர்பாக ஈழத் தமிழர்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்
என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இந்த வாக்கெடுப்பு நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.
தமிழீழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி கூறிய கருத்துக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சவின் தம்பி கோத்தபாய ராஜபக்ச மற்றும் அந்நாட்டு அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதற்கும் கருணாநிதி சளைக்காமல் பதிலடி கொடுத்திருந்தார். இந்தநிலையில் தமிழீழம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுத்து வருகிறது.



