காமெடியன்கள் ஹீரோவாக நடிக்க பயப்படும் காலத்தில் சொந்த தயாரிப்பில் ஹீரோவாக நடித்து வருகிறார் கருணாஸ், திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பாணி படங்களில்
ஹீரோவாக நடித்தார். இரண்டுமே அவரது சொந்தப் படங்கள். அடுத்து வேறு யாராவது ஹீரோவாக நடிக்க கூப்பிடுவார்களா என்று பார்த்தார், கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தெரியவில்லை. அடுத்த படத்தையும் தானே தயாரிக்க ஆரம்பித்துவிட்டார். ரகளபுரம் படத்தில் பயந்தாங்கொள்ளி போலீசாக நடித்து வருகிறார் கோவை சரளா, மனோபாலா, சிங்கம்புலி, எம்.எஸ்.பாஸ்கர் என ஒரு காமெடி பட்டாளத்தை வைத்துக் கொண்டு இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். அடுத்து அம்பாசமுத்திரம் அம்பாணி படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கும் படத்திலும், ரகளைபுரம் படத்தை இயக்கும் மனோ இயக்கத்தில் இன்னொரு படமும் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதற்கிடையில் ஷக்தி சிதம்பரம் இயக்கும் மச்சான் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.
ஹீரோவாக மாறியது குறித்து அவர் கூறியதாவது: காமெடியன்கள் ஹீரோவா நடிக்கிறது புதுசு இல்லை. என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, நாகேஷ், கவுண்டமணி, வடிவேல்னு பெரிய லிஸ்ட்டே இருக்கு. நான் யார் பணத்துலேயும் ஹீரோவாகல என் சொந்தப் பணத்துல நடிக்கிறேன். எல்லோரும் சினிமாவில் சம்பாதித்து வீடு, நிலம் வாங்குவாங்க, நான் பிலிம் வாங்குறேன். சினிமாவுல சம்பாதிச்சு வட்டிக்கு விடுவாங்க. நான் வட்டிக்கு வாங்கி சினிமா தயாரிக்குறேன். ஒரு செகண்டுக்கு பிலிம் 24 பிரேம் ஓடும். நான் ஒவ்வொரு செகண்டும் சினிமாவுக்காக ஓடுறேன். என் படத்துக்கு ஒரு மினிமம் கியாரண்டி இருக்கு அதனால தைரியமா நடிக்கிறேன்.
ரகளபுரம் படத்துல போலீசை நையாண்டி பண்ணி நடிக்கிறதா சிலபேர் வதந்திய கிளப்பி விட்டுருக்காங்க. அப்படி எதுவுமே இல்லை. எதைக் கண்டாலும் பயப்படுற ஒருத்தனுக்கு போலீஸ் வேலை கிடைச்சுடுது. அவன் கிறுக்குத்தனமா எதையாவது செய்ய அது பெரிய விளைவுகள உண்டாக்குது. இதை வச்சு காமெடியா பண்ணியிருக்கோம். நான் போலீசை ரொம்ப மதிக்கிறவன். அதுவும் தமிழ்நாட்டு போலீஸ்தான் இந்தியாவுலேயே பெஸ்ட்டுன்னு சொல்றாங்க. அவுங்கள எப்படி நான் கிண்டல் பண்ணுவேன். போலீசோட பெருமைய சொல்றமாதிரி நிறைய வசனம் இருக்கு. அதனால வதந்திகளை யாரும் நம்பாதீங்க. என்றார்


