புதுடில்லி: லண்டன் <<ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மேரி கோம், சுஷில் குமார், யோகேஷ்வர் தத் ஆகியோர் தாயகம் திரும்பினர். இவர்களுக்கு, டில்லி விமான நிலையத்தில்
உற்சாக வரவேற்பு தரப்பட்டது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதில் எப்போதும் இல்லாத வகையில் இந்தியா, 2 வெள்ளி, 4 வெண்கலம் என, 6 பதக்கம் வென்றது. செய்னா நேவல், விஜய் குமார், ககன் நரங் ஆகியோர் ஏற்கனவே நாடு திரும்பினர்.
நிறைவு விழாவில் பங்கேற்றபின். பெண்கள் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற மேரி கோம், மல்யுத்தத்தில் வெள்ளி வென்ற சுஷில் குமார், வெண்கலம் கைப்பற்றிய யோகேஷ்வர் தத் ஆகியோர் நேற்று, டில்லி இந்திரா சர்வதேச விமானநிலையம் வந்திறங்கினர்.
அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள், மேரி கோமிற்கு மாலை அணிவித்து வரவேற்றனர். இதேபோல 3வது "டெர்மினலில்' ஏராளமான ரசிகர்கள் கையில் மாலைகள், பூங்கொத்து, இனிப்புகளுடன் மல்யுத்த வீரர்களை வரவேற்கக் காத்திருந்தனர். "டிரம்ஸ்' அடித்துக் கொண்டும், நடனம் ஆடிக்கொண்டும், தங்கள் ஒலிம்பிக் "ஹீரோக்களை' வரவேற்க தயாராக இருந்தனர்.
விமானத்தில் இருந்து இறங்கி வந்த சுஷில் குமார், யோகேஷ்வர் தத்தை, இந்திய விளையாட்டு ஆணையத்தின் (எஸ்.ஏ.ஐ.,) சார்பில், முதலில் வரவேற்றனர். அதுவரை பொறுமை காத்த ரசிகர்கள், வீரர்களை கண்டதும், தடுப்புகளை தாண்டிக் கொண்டு அருகில் செல்ல முயற்சித்தனர். இவர்களை கட்டுப்படுத்துவது போலீசிற்கு பெரும் பாடாக இருந்தது.
பின், சுஷில் குமார், யோகேஷ்வர் தத் இருவரையும் ரசிகர்கள் தங்கள் தோள்களில் தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர். அங்கிருந்த செய்தியாளர்களை சந்திக்க மறுத்த சுஷில் குமார், திறந்தவெளி "டிரக்கில்' ஏறிச் சென்றார். ""ரசிகர்களின் வரவேற்பு பெரியளவில் இருந்தது,'' என்ற, யோகேஷ்வர் தத், காரில் கிளம்பிச் சென்றார்.
மேரி கோம் மகிழ்ச்சி
மேரி கோம் கூறுகையில்,""ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதை தங்கப்பதக்கமாக மாற்ற முடியாதது வருத்தம் தான். அரையிறுதிக்கு முன் தெளிவாகத்தான் இருந்தேன். போட்டி துவங்கிய பின் அதிக குழப்பம் ஏற்பட்டது. இங்கிலாந்து வீராங்கனையை எதிர்த்து அதிக தாக்குதல் நடத்தவில்லை. தவிர, ரசிகர்கள் ஆதரவு அவருக்கு அதிகமாக இருந்தது. பொதுவாக ரசிகர்கள் சப்தம் என்னை பாதிக்காது. இருப்பினும் அன்று, என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இதை எப்படி விவரிப்பதே என்றும் புரியவில்லை.
லண்டனில் தங்கம் வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். கடைசியில் வெண்கலம் கிடைத்தது மகிழ்ச்சி தான். அடுத்து ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கிலும் பங்கேற்க முயற்சிப்பேன். இதற்கு எனது <உடல் ஒத்துழைக்குமா எனத் தெரியவில்லை. எல்லாம் சரியாக நடந்தால், தங்கம் வெல்ல முயற்சிப்பேன்,''என்றார். '


