ஓட்டுநருக்கு பதிலாக ஸ்மார்ட்போன் உதவியுடன் மட்டும் காரை இயங்க வைக்கும் ஆராய்ச்சியில் அவுஸ்திரேலிய விஞ்ஞானி ஈடுபட்டுள்ளார்.
ஓட்டுநரின் உதவியில்லாமல் இயங்கும் தானியங்கி கார்களை உருவாக்கும் முயற்சி பல காலமாகவே நடந்து வருகிறது.
உலகப்புகழ் பெற்ற ஆடி, பிஎம்டபிள்யூ, போர்டு, ஹோண்டா, வால்வோ நிறுவனங்களும் தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு ரோபோட்டிக் கார்களை உருவாக்கியுள்ளன.
ஜிபிஎஸ் மற்றும் நேவிகேஷன் சாப்ட்வேர் உதவியுடன் இயங்கும் காரை பல தொலைவுக்கு இயக்கி கூகுள் நிறுவனம் சாதனை படைத்தது.
இந்நிலையில் வெறும் ஸ்மார்ட்போன் உதவியுடன் மட்டும் காரை இயக்கச் செய்யும் ஆராய்ச்சியில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜுன் ஜோ என்ற விஞ்ஞானி ஈடுபட்டுள்ளார்.
இவர் குயீன்ஸ்லேண்ட் மாநிலம் கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள க்ரிஃபித் பல்கலையில் ரோபோடிக்ஸ் துறை ஆராய்ச்சியாளராக உள்ளார். அவுஸ்திரேலிய ரோபோடிக்ஸ் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
தனது ஆராய்ச்சி பற்றி கூறுகையில், சாலை, தெரு, சந்து எங்கெங்கு இருக்கின்றன என்று கண்டறியும் லேன் டிடெக்ஷன் சாப்ட்வேர், தடைகள் மற்றும் வாகனங்களை காட்டும் லேசர் டிடெக்ஷன் கருவிகள், சென்சார்கள் போன்றவை பல தானியங்கி கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது வெளிவரும் ஸ்மார்ட்போன்களில் குவாட், கோர் பிராசஸர்கள் இருக்கின்றன. அதனால் மேற்கண்ட வேலைகளை செய்வதற்கு பிரத்யேக கருவிகள், சென்சார்கள் தேவையில்லை.
எல்லா வேலைகளையும் ஸ்மார்ட்போன் செய்துவிடும். சாலை மட்டுமின்றி சிறிய சந்து பொந்துகளையும் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஜிபிஎஸ் வசதி மூலம் தெரிந்துகொள்ளலாம். வழியில் கல், வேகத்தடை போன்ற தடைகள் இருக்கிறதா, எதிரே மற்றும் அருகே வாகனங்கள் வருகிறதா, அவற்றின் வேகம், எந்த திசையில் வருகிறது உள்பட பல அம்சங்களை ஸ்மார்ட்போன் மூலமாக தெரிந்துகொள்ள முடியும்.
தொழில்நுட்பத்தை நம்புவதில் தவறில்லை. அதே நேரம் பாதுகாப்பும் முக்கியம். எனவே, ஸ்மார்ட்போன் மட்டுமின்றி காரின் இயக்கத்தை கம்ப்யூட்டர் சாப்ட்வேரும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும்.
ஸ்மார்ட்போன் எதிர்பாராதவிதமாக செயலிழக்கிற சூழ்நிலை ஏற்பட்டால், சாப்ட்வேர் உதவியுடன் கார் இயங்கத் தொடங்கும். ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இணைந்த கன்ட்ரோல் சிஸ்டமாக உருவாக்கியுள்ளேன்.
ஸ்மார்ட்போனின் கமெரா கண்களின் அடிப்படையில் இயங்குவதால், செலவும் குறைவு. கமெரா லென்ஸ் முன்பக்கம் பார்க்குமாறு டேஷ்போர்டில் ஸ்மார்ட்போனை வைத்துவிட்டால் போதும், போக்குவரத்தை அனுசரித்து, ஸ்மார்ட்போனே காரை ஓட்டிச் செல்லும்.
அசம்பாவித சூழ்நிலை ஏற்படும் என்று உணரப்பட்டால், உடனடியாக நம்மை ஸ்மார்ட்போன் எச்சரிக்கவும் செய்யும். எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுவிட்டால் முக்கிய எண்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிவிடும். சிலருக்கு வேகமாக கார் ஓட்டினால் பிடிக்கும். சிலருக்கு மெதுவாக, சொகுசாக செல்வது பிடிக்கும்.
தேவைப்படும் புரொஃபைலை ஸ்மார்ட்போனில் தேர்வு செய்தால், உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப காரை ஸ்மார்ட்போன் ஓட்டும். எந்த காரிலும் இந்த வசதியை எளிதில் பொருத்திக் கொள்ள முடியும்.
அனேகமாக இந்த ஆராய்ச்சி ஓராண்டுக்குள் முடிந்துவிடும் என நம்புகிறேன். அதற்கு பிறகு, ஸ்மார்ட்போன் கார் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.


