தமிழகத்தின் புழல் சிறைக்கு எதிரில் இலங்கை புகழிடப் பெண்ணொருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்
காவாங்கரை பிரதேசத்தில் உள்ள புகழிட முகாமில் இருந்த 6 அகதிகளை புழல் காவற்துறையினர் நேற்றிரவு கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அந்த பெண் தீக்குளிக்க முயற்சித்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பெண், காவற்துறையினர் கைதுசெய்து அழைத்துச் சென்ற புகழிடக்காரர் ஒருவரின் மனைவியாவார்.
காவற்துறையினர் தனது கணவரை கைதுசெய்து அழைத்து வந்தமை குறித்து, அந்த பெண் காவற்துறையினரிடம் விசாரித்த போது, தாம் அவ்வாறு எவரையும் அழைத்து செல்லவில்லை என காவற்துறையினர் தெரிவித்ததை அடுத்தே அந்த பெண் தீக்குளிக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. பெண் தற்கொலை செய்து கொள்ள முயற்சி மேற்கொண்டதை அடுத்து, தாம் 6 பேரை கைதுசெய்துள்ளதாக புழல் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர், கைதுசெய்யப்பட்ட ஆறு பேரில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏனைய இரண்டு பேரை விடுதலை செய்ய முடியாது என காவற்துறையினர் கூறியுள்ளனர்.
தமிழக முகாம்களில் உள்ள புகழிடக்காரர்கள் கேரளா ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதற்காக, கைதுசெய்யப்பட்ட இரண்டு பேர் ஏனையவர்களிடம் பணம் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாகவும் அவர்களும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள இரண்டு பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.



