காலே: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில், இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது. முதல் இன்னிங்சில் 100 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, மோசமான
தோல்வியை தவிர்க்க போராடுகிறது.
இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 472 ரன்கள் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணி, இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்திருந்தது.
சுழல் ஆதிக்கம்:
நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணியின் யூனிஸ் கான் (29), முகமது அயுப் (25) ஓரளவு ரன் சேர்த்தனர். அடுத்து வந்த அத்னன் அக்மல் (9), அப்துர் ரெஹ்மான் (1), உமர் குல் (2) ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 100 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை சார்பில் ரந்திவ் 4, ஹெராத் 3, குலசேகரா 2 விக்கெட் கைப்பற்றினர்.
"பாலோ-ஆன்' இல்லை:
நூறு ரன்களுக்குள் சுருண்டதால் பாகிஸ்தான் அணிக்கு "பாலோ-ஆன்' கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 372 ரன்கள் முன்னிலையில் இருந்த இலங்கை அணி, "பாலோ-ஆன்' கொடுக்கமால், இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. இலங்கை அணிக்கு தில்ஷன், பரணவிதனா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய தில்ஷன், டெஸ்ட் அரங்கில் தனது 21வது அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த போது பரணவிதனா (25) அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த தில்ஷன் (56) நம்பிக்கை அளித்தார்.
இலங்கை "டிக்ளேர்':
அடுத்து வந்த சங்ககரா (1), கேப்டன் மகிளா ஜெயவர்தனா (14), சமரவீரா (15) சோபிக்கவில்லை. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. பாகிஸ்தான் சார்பில் ஜுனாய்டு கான் 3, சயீத் அஜ்மல் 2 விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கு:
பின், 510 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹபீஸ் (3), தபீக் உமர் (10), அசார் அலி (7) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். மூன்றாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்து, 474 ரன்கள் பின்தங்கி உள்ளது. இலங்கை சார்பில் குலசேகரா 2, ஹெராத் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.



