போஸ்னன்: யூரோ கோப்பை கால்பந்து தொடரில், இத்தாலி, குரோஷிய அணிகள் மோதிய விறுவிறுப்பான லீக் போட்டி டிரா(1-1) ஆனது. முதல் பாதியில் முன்னிலை பெற்ற இத்தாலி,
இரண்டாவது பாதியில் மந்தமாக ஆடியதால், வெற்றியை வசப்படுத்த முடியவில்லை.
ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் 14வது "யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று போலந்தில் உள்ள போஸ்னனில் நடந்த "சி பிரிவு லீக் போட்டியில் இத்தாலி, குரோஷிய அணிகள் மோதின.
பிர்லோ அபாரம்:
ஆட்டத்தின் முதல் பாதியில் இத்தாலி ஆதிக்கம் செலுத்தியது. குரோஷிய "கோல் பகுதியில் தான் பெரும்பாலான நேரம் விளையாடியது. 39வது நிமிடத்தில் கிடைத்த "பிரீ-கிக் வாய்ப்பில் அனுபவ வீரரான ஆன்ட்ரியா பிர்லோ அற்புதமான கோல் அடிக்க, இத்தாலி 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் குரோஷிய வீரர்கள் தவித்தனர். முதல் பாதி முடிவில் இத்தாலி 1-0 என்ற முன்னிலையில் நீடித்தது.
இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க ஆக்ரோஷமாக போராடினர். ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் இத்தாலியின் பலோட்டலி அடித்த பந்து, கோல் "போஸ்டுக்கு சில "இன்ச் மேலே சென்றதால், அருமையான வாய்ப்பு நழுவியது. பின் ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் குரோஷியாவின் மாண்ட்ஜுசிக் ஒரு அசத்தல் கோல் அடிக்க, போட்டி 1-1 என சமநிலையை எட்டியது. இதற்கு பின் ஏனோதானோ என விளையாடிய இத்தாலி அணியினர் நேரத்தை வீணடித்தனர். இறுதியில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா ஆனது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.


