இனப்பிரச்சினைக்கான தீர்வில் அரசின் இழுத்தடிப்பானது நாட்டில் பிளவு ஏற்படுவதற்கான நிலையினையே தோற்றுவித்துள்ளது.
யதார்த்த நிலையை அரசு பொருட்படுத்தாவிட்டால் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மேலும் தலையீடுகளை மேற்கொண்டு இலங்கையை இரண்டாக பிரித்து விடும் என்று ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்ததும் வடக்கின் பிரச்சினைகளை அரசு புரிந்து காள்ளவில்லை. திருமணத்திற்கு கூட இராணுவத்தின் அனுமதியினை வடக்கு தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் இந்த நிலை சிவில் உரிமைகளின் அடிப்படை தன்மையை கேள்விக் குறியாக்கிவிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து டில்வின் சில்வா தொடர்ந்தும் கூறுகையில்,
அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்பதில்லை. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களை கடந்துள்ள நிலையிலும் இன்னும் மீள்குடியேற்ற பிரச்சினைகளையோ அம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளையோ தீர்த்து வைப்பதில் அரசு முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக வடக்கு மக்களுக்கு தொடர்ந்தும் இராணுவ கெடுபிடிகளை அதிகரிக்கச் செய்து சிவில் நிர்வாகத்திற்கும் ஜனநாயகத்திற்குமான சூழலை முற்றாக புறக்கணித்து வருகின்றது.
இதனால் நாட்டில் மீண்டும் இனவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்குமான சூழல் ஏற்பட்டு வருகின்றது. அரசாங்கத்திற்குள் அங்கம் வகிக்கும் சிங்கள இனவாதக் கட்சிகளின் கருத்துக்களால் இன நல்லிணக்கம் என்ற விடயம் கேள்விக்குறியாகி விட்டுள்ளது. எவ்வாறாயினும் தற்போது அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கை பிரச்சினைகளை கடும் போக்குடன் கையாள்கின்றமை நாட்டின் இறையாண்மைக்கு சாதகமான விடயமாக கருத முடியாது.
வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து இம் மாகாணங்களை இலங்கையிலிருந்து பிரித்து வேறுவொரு தனி நாடாக பிரகடனப்படுத்தக்கூடிய நிலைகூட உள்ளது. எனவே அரசாங்கம் சூழலை புரிந்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் போலியாக பிசாரங்களை செய்ய முடியாது. வடக்கு மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். இதற்கான சூழøல ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும் எனக் கூறினார்.



